Wednesday 21 March 2012

பெண்கள் அழுதால் ஆண்கள் வெறுப்பது ஏன்?


நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு கணவன், மனைவி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக்கைச் சிந்தாத மனைவிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது.
மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது. சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம்.
ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெறுக்கிறார்களாம். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்களாம். மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கர்ச்சீப்பும் கையுமாக கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் புலம்பலாக உள்ளது.
பெண்கள் அழும்போது ஆண்கள் சந்திக்கும் அவஸ்தைகளாக இதைக் கூறுகிறார்கள்…
ஒரு பெண் அழத் தொடங்கி விட்டால்,ஆண்களுக்கு கையும் ஓடுவதில்லையாம், காலும் ஓடுவதில்லையாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம், அவர்கள் கோருவதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறதாம்.
பொது இடங்களுக்கு, கடை போன்றவற்றுக்குச் செல்லும்போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பாராமல் கண்களை கசக்குகிறார்களாம். அப்போது ஆண்களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவானாம். எனவே இதைப் பயன்படுத்தி பல பெண்கள் கண்களை கசக்கியோ அல்லது கசக்குவது போல நடித்தோ காரியத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு செம டென்ஷனாகி விடுகிறதாம். இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சரி சரி அழாதே, வாங்கித் தர்றேன் என்று பல்லைக் கடித்தபடி கூறி அமைதிப்படுத்துகிறார்களாம்.
சாதாரண பிரச்சினைகளைக் கூட பெரிய ரேஞ்சுக்கு பில்டப் செய்து சீன் கிரியேட் செய்கிறார்கள் பெண்கள் என்பது பல ஆண்களின் புகாராக உள்ளதாம். ஒண்ணுமே இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறாங்க என்கிறார்கள் அவர்கள். அதாவது சும்மா கேட்டால் கிடைக்காது என்று கருதும் விஷயத்தை கண்ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்கள் விரும்புவதில்லையாம்.
நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம்.
உங்க கேஸ் எப்படி…?

No comments:

Post a Comment